Sunday, 19 September 2021

அதிகாரம் (1: 10 -11) : தேவ தூதர்கள் வழி நடத்துதல்.

தரிசனங்கள் ஏன் அருளப்படுகின்றன?



தேவ தூதர்கள்:

தேவ தூதர்கள் வழி நடத்துதல் எதற்காகக் கொடுக்கப் படுகிறது? 

தரிசனங்கள் எதற்காக அருளப்படுகின்றன? 

இவற்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தவறான உபதேசங்களில் விழுந்து விடாமல் தடுக்கப்படுவதுடன் அதிலிருந்து விலகி வாழ்வதற்கும் கற்றுக் கொள்ள முடியும். 

"தேவ மக்களுக்கு உதவி செய்திடும் பணிவிடை ஆவிகள்" எனத் தேவ தூதர்களைக் குறித்து வேதம் கூறுகிறது (எபிரேயர் 1:14). 

தேவ தூதர்கள் இறை மக்களை வழி நடத்திச் செல்லும் பல அற்புதமான நிகழ்வுகள் "அப்போஸ்தல நடபடிகள்" நூலில் எழுதப்பட்டுள்ளது. 

தேவ தூதர்கள் வழிநடத்திய சில சம்பவங்கள் :

1. ஆண்டவரது இரண்டாம் வருகையை முன்னறிவித்தனர் (1:11).

2. பேதுருவும், யோவானும் ஜீவ வார்த்தையை அறிவிக்கும்படி விடுதலை செய்யப்பட்டார்கள் (5:19-20).

3. பிலிப்பு  எத்தியோப்பியா மந்திரியிடம் நற்செய்தி அறிவிக்க வழி நடத்தப்பட்டார் (8:26).

4. கொர்நேலியுவிற்கு உண்மையான இறை வழி காட்டுதல் அருளினார் (10:3-6).

5. பேதுரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் (12:7-11). 

6. ஏரோதுவிற்கு தண்டனை அளிக்கப்பட்டது (12:21-23).

7. பவுலுடன் கப்பற்பயணம் செய்தவர்களின் மரண பயம் நீங்கி ஆறுதல் அடைந்தனர் (27:22-24). 

தரிசனங்கள்:

அது போலச் சீடர்கள் தரிசனங்கள் வழியாகவும் வழி நடத்தப்பட்டனர். 

1. திருத் தூதர் பவுல் பார்வை அடையும் படி ஜெபிப்பதற்குச் சீடர் அனன்யாவுக்கு  தரிசனத்தின் மூலம் உத்தரவு தரப்பட்டது (9:10-11).

2. திருத் தூதர் பவுல் தான் மீண்டும் பார்வை அடைவதற்கு அனன்யா என்பவர் வருவார் எனும் தரிசனம் அருளப்பட்ட.து (9: 12).

3. புற இனத்தைச் சேர்ந்தவர்களும் திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருத் தூதர் பேதுருவிற்கு மூன்று முறை தரிசனத்தின் மூலமாகச் சொல்லப்பட்டது (10: 10-16).

4. மக்கெதோனியா மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் எனத் திருத் தூதர் பவுல் தரிசனம் பெற்றார் (16:9).

5. திருத் தூதர் பவுல் கொரிந்தியருக்கு தேவ பணியைத் தொடர்ந்து செய்யும்படி தரிசனம் அருளப்பட்ட.து (18:10).

6. திருத் தூதர் பவுல் எருசலேமில் சாட்சி பகிர்ந்ததைப் போல ரோம் நகரத்திலும் சாட்சி கொடுக்க வேண்டும் எனத் தரிசனத்தின் வழியாகச் சொல்லப்பட்டது (23:11).

இந்த சம்பவங்கள் நமக்கு எதைக் கற்றுத் தருகிறது? தேவ தூதர்கள் வழி நடத்துதல் எதற்காகக் கொடுக்கப் படுகிறது? தரிசனங்கள் ஏன் அருளப்படுகின்றன? 

இந்த நிகழ்வுகளை ஒரு முத்து மணி மாலையாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு முத்து மணி. கோர்க்கப்பட்ட  முத்துச்சரத்தை உற்றுக் கவனமாகக் கவனித்தால் ஒரு மெல்லிய நூலிழை புலப்படும். அந்த மெல்லிழை நூல் தான் தரிசனத்தின் நோக்கம். 

நாம் கண்டு கொண்ட  நோக்கங்களை மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

1. வேத வாக்கியத்தில் எழுதப்பட்டுள்ள தரிசனத்தின் நிறைவேறுதலின் படி இவை அருளப்படுகின்றன. இரட்சிப்பு எல்லா மக்களுக்கும் உரியது. இது இறைவனது திட்டம்.  

2. இறை மக்கள் விசுவாசத்தில் உறுதிப்படுவதற்கு இவையெல்லாம் உதவி செய்கிறது. தரிசனம் விசுவாசத்தை வளர்ச்சி அடையச் செய்யும். 

3. இந்த நிகழ்வுகள் மக்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டும் சாட்சியாகச் செயல்பட்டது. தரிசனம் மாற்றத்தை ஏற்படுத்தும். 

4. அநேக மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். தரிசனம் இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தும். 

5. சபைகளின் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தரிசனம் எண்ணிக்கை வளர்ச்சியை அளிக்கும். 

6.  நற்செய்தி பல புதிய பகுதியில் அறிவிக்கப்பட்டது. தரிசனம் எல்லைகளை விரிவாக்கும். 

7. இயேசு கிறிஸ்துவின் நாமம் அதனால் மகிமை அடைந்தது. தேவ தூதர்கள் வழி நடத்துதல் மற்றும் தரிசனங்கள் நிறைவேறும் போது விசுவாசிகள் துதித்துப் பாடி தேவனை மகிமைப் படுத்தித் தொழுது கொள்வார்கள்.

இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வது நல்லது. அதனால் பல கள்ள உபதேசங்களிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில் கடைசிக் காலத்தில் பல போலியான தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள். அவர்கள் நன்கு கற்றுத் தேர்ந்த தேவ பிள்ளைகளையும் கூட வஞ்சகமாக ஏமாற்றி விடுவார்கள் என வேதம் எச்சரிக்கின்றது. 

ரிக் வாரன் எனும் தேவ ஊழியர் இவ்விதம் குறிப்பிடுகிறார். 

இவ்வுலக வாழ்வில் செழிப்பு, வெற்றி, ஆளுகை ஆகியவற்றை வாழ்வில் அடைந்து சிறந்தோரைத் தேவன் விசுவாச வீரர்களாகப் பார்ப்பதில்லை. மாறாக வாழ்க்கையைத் தற்காலிகமானதாகக் கருதி, உண்மையாய் உழைத்து தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசாகிய நித்திய வாழ்வை எதிர்பார்த்து வாழ்பவர்களையே தேவன் விசுவாச வீரர்களாகக் காண்கிறார்.

தரிசனம் தேவனுடைய ராஜ்யத்திற்கு நேராக நம்மை வழிநடத்த வேண்டும். ஆமென். 

No comments:

Post a Comment