Monday, 18 October 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 4

அவர்கள் ஐக்கியத்தை நம்பினர்.

(They Believed in the Fellowship  -  Acts 1:12)



1. சபை கூட்டுறவு (ஐக்கியம்):

ஆண்டவரை தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் ஒன்றாகக் கூடி ஆராதிக்கும் இடம் திருச்சபை. அதுவே ஐக்கியம். அவர்கள் கூடுகை நிகழும் இடம் ஆலயமாக மாறுகிறது. 

ஆதி திருச்சபை விசுவாசிகள் முதலில் எருசலேம் தேவாலயத்தில் நாள்தோறும் கூடி வழிபட்டனர். பின்னர் அவர்கள் தேவாலயத்தில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அவர்கள் தங்கள் வீடுகளில் ஆராதனை செய்யத் தொடங்கினர். வீடுகள் ஆலயமானது. 

ஆலயம் எனும் ஒரு கட்டிடத்திற்குள் கடவுள் வசிப்பது இல்லை. இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே ஒன்று கூடி ஒருமனதுடன் ஜெபிக்கின்றனரோ, அங்கே அந்த இடத்திற்குக் கடவுள் வருவார் என்பது வாக்குறுதி.

"உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 18:19-20).

திருத் தூதர் பவுல் நமது உடல் இறைவனின் ஆலயம் எனக் கூறுகிறார் (1 கொரி 6:19). ஏசாயா தீர்க்கதரிசியும் நமது உள்ளத்தில் ஆண்டவர் வாசம் செய்வதைக் கூறியுள்ளார்.

"உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், "தூயவர்" என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே; உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்" (ஏசாயா 57:15).

அவர்கள் ஐக்கியத்தில் அப்போஸ்தலர்கள் இருந்தனர். ஆண்டவரின் தாயார் மற்றும் சகோதர சகோதரிகளும் இருந்தனர். யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், சுயாதீனமானவர்கள், ஆண்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இருந்தனர். ஒரு குடும்பமாக வாழ்ந்தனர். 

அவர்கள் பல்வேறு பின்னணி உடையவர்கள். மீனவர் முதல் வரி வசூலிப்பவர் வரை பல தொழில் பின்னணியில் இருந்து வந்தவர்களும் இருந்தனர். எனினும் அவர்களுக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் காணப்படவில்லை. ஏற்றத் தாழ்வும் இல்லை. யார் பெரியவர் என்ற போட்டி இல்லை. அனைவரும் இணைந்து ஒருமனதாகச் செயல்பட்டனர்.  

இவர்கள் அனைவரையும் ஒன்றாக இனைத்தது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிந்திய விலையேறப்பெற்ற திரு இரத்தம். 

2.  ஒரு மனம்:

ஆதி திருச்சபை விசுவாசிகளிடம் காணப்பட்ட மற்றுமொரு சிறந்த தன்மை அவர்களிடம் இருந்த "ஒரு மனம்". 

ஆறு முறை அப்போஸ்தல நடபடிகள் நூலில் அவர்கள் ஒரே மனதுடன் செயல் பட்டார்கள் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது. 

அப் 1:14/ 2:1/ 2:46/ 4:24/ 5:12/ 15:26.

அவர்கள் ஒரு மனதுடன் ஜெபித்தார்கள். ஜெபங்கள் உடனடியாக கேட்கப்பட்டது. அதற்குத் தேவனிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டனர். விசுவாசத்தில் வளர்ந்தனர். 

எங்கு ஒரு மனம் உள்ளதோ அங்கு தான் தேவ பிரசன்னம் இருக்கும். ஒரு சபையின் பலத்தை அதன் எண்ணிக்கை அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது. எண்ணிக்கை முக்கியமில்லை. ஐக்கியம் தான் முக்கியம். அது ஒற்றுமை உணர்வுடன் செயல்புரியும் தன்மை முக்கியம். 

வேதம் சொல்லும் கணக்கு விசித்திரமானது. 

"ஒரே ஒரு ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவான். இரண்டு பேர் சேர்ந்தால் பதினாயிரம் பேரை விரட்டி அடிப்பார்கள்". (உபாகமம் 32:30). இது இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லப்பட்ட வாக்குறுதி. 

 3. ஆலயம் செல்வது சாலச்சிறந்தது:

ஆண்டவரைப் பணிந்து  தொழுகை செய்வதற்காக ஆலயம் செல்கிறோம். அவ்வாறு இணைந்து ஆராதிப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஆலய ஆராதனையில் தேவனை ஒருமித்து மகிமைப் படுத்தி வணங்குகிறோம். அது நமது உள்ளத்தில் தேவ சமாதானத்தைத்  தருகிறது. 

ஒரு சிறந்த திருச்சபை அதன் ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் ஆவிக்குரிய பண்புகளை வைத்து அளவிடப் பட வேண்டும். மிகப் பிரமாண்டமான கட்டிடங்கள், அதி நவீன இசைக் கருவிகள், மேம்பட்ட தொழில் நுட்பம், அதிக திரள் கூட்டம் இவற்றைக் கொண்டு ஒரு திருச்சபையை மதிப்பிடக் கூடாது. 

"சபை கூடிவருதலை விட்டு விடக் கூடாது. அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்ப கருத்தாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் இறுதி நாள் நெருங்கி வருவதைக் காண்கிறோமே" என எபிரேயர் நிருபம் அறிவுறுத்துகிறது (எபிரேயர் 10:24-25).

4. விசுவாசிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

ஆலயத்தில் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரசங்கியின் நூலில் சாலமன் கற்றுத் தருகிறார் (பிரசங்கி 5: 1-5).

1. ஆலயத்திற்குச்  செல்லும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். மதிகேடரைப் போல வெறும் பலி, காணிக்கை செலுத்திட மட்டும் போகக் கூடாது. அங்குச் சொல்லப்படுகிற வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் கவனமாக உணர்ந்து கேட்க வேண்டும். 

2. ஆலயத்தில் சிந்தித்துப் பார்க்காமல் எதையும் பேசக் கூடாது. கடவுளின் முன்னிலையில் நிற்கிறோம் எனும் உணர்வுடன் மிகச் சுருக்கமாகப் பேச வேண்டும். அதிகம் பேசுவது மூடத்தனம். 

3. மனதில் சிந்தனை செய்து பார்க்காமல் வாக்குக் கொடுக்கக் கூடாது. கடவுளுக்கு எதாவது வாக்கு கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தாமல் செயல் பட வேண்டும். 

ஒரு விசுவாசி ஆலயத்திற்குத்  தொழுகை செய்யச் செல்லும் போது அவர் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று ஆயக்காரன் - பரிசேயன் உவமை வழியாக ஆண்டவர் கற்றுத் தருகிறார் (லூக்கா 18: 9-14).

நமது பக்தி, உபவாசம், காணிக்கை இவற்றால் ஆண்டவரைப்  பிரியப்படுத்தி விட முடியாது. தாழ்மையுடன் தகுதியின்மையை உணர்ந்து தொழுது கொள்ள வேண்டும். ஒரு போதும் பிறரை அற்பமாக எண்ணக் கூடாது. 

ஒரு போதும் ஆலயத்தில் அதிகாரம் மிக்க பொறுப்புகளை அடைய வேண்டும் என ஆசைப் படாதீர்கள். புகழப்பட வேண்டும் என எதிர் பார்த்து செயல் புரியக்கூடாது. முதன்மையான இடத்தில் அமர ஆசைப்படக் கூடாது. நமது திட்டங்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது. 

5. ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

பவுல் திருச்சபையின் ஊழியர்கள், உதவியாளர் இவர்களது தகுதிகள் குறித்து திமொத்தேயு வுக்கு எழுதிய குறிப்புகள் நல்ல ஊழியர்களை நாம் அடையாளம் காண உதவுகிறது. 

அவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். தனது குடும்பத்தை நன்கு நடத்த வேண்டும். ஒரு மனைவி உடையவராகவும், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும். அவர் குடி வெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தாராய் இருக்க வேண்டும். சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும். தமது சொந்த குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகு‌ந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். 

வேதம் மேலும் இவ்விதமான கேள்வியை முன் வைக்கிறது. 

தமது சொந்த குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?  (1 திமொத்தேயு 3: 2-5).

ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியாக வளர்வதற்கு விசுவாசிகளது கூட்டுறவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நல்ல ஐக்கியத்தில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒரு நல்ல திருச்சபையின் ஐக்கியம் நாம் கிறிஸ்துவில்  நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழ உதவி செய்கிறது. அது நம்மைத் தவறான உபதேசங்களில் விழுந்து விடாமல் தடுத்துப் பாதுகாக்கும். சீர் செய்யும். ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

கர்த்தர் இவ்விதமான நல்ல சபையில், ஐக்கியத்தில் இணைந்து செயல்பட உதவி செய்வாராக. ஆமென். 

No comments:

Post a Comment