Monday, 30 August 2021

திருத் தூதர் பணிகள் - நூல் அறிமுகம் - பகுதி 2: நான்கு முக்கிய சம்பவங்கள்.


நான்கு முக்கிய  சம்பவங்கள்.


அப்போஸ்தல நடபடிகள் நூலில் பல சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வற்றுள் நான்கு நிகழ்வுகள் மிக மிக முக்கியமானவைஅவை உலக வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்தது. அவையாவன:

1. ஆவியானவர் ஆளுகை:

"பெந்தேகொஸ்தே" எனும் நாளில் சீடர்கள் மேல் தூய ஆவியானவர் இறங்கினார். அதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை அவர்களுக்குக் கிடைத்தது. அதுவரை அச்சத்துடன் பயந்து வாழ்ந்தவர்கள், அதன் பின்னர் "இயேசு உயிர்த்தெழுந்தார்" எனத் தைரியமாகச் சாட்சி பகிர்ந்தனர். அதனால் கிறிஸ்தவம் எனும் மாபெரும் உலகளாவிய சமயம் உதித்தது (அதிகாரம்: 2).  

2. அனைவரும் இறைவனின் குழந்தைகள்:

தாங்கள் மட்டுமே இறைவனது குழந்தைகள் என "யூதர்கள்" உரிமை கொண்டாடினர். ஆனால் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை. அவர் எந்தவொரு தனிப்பட்ட இனம், சாதி, மொழி, நிறம் இவற்றிற்குச் சொந்தம் கிடையாது.   

எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள். இந்தக் கோட்பாடு தீர்மானமாக நிறுவப்பட்டது (8:5, 8: 26-39, 10: 1-48).

3. குறிப்பிட்ட ஆலயம் - சடங்குகள் - பலிகள் வழிபாடு முறை முற்றுப் பெற்றது. 

"இறைவன் எருசலேமை ஆலயத்தில் மட்டும் தான் இருக்கிறார். பாவத்தைப் போக்க மிருகங்கள், பறவைகளை அங்குக் கொண்டு வந்து பலி செலுத்த வேண்டும்" எனப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப் பட்ட பாவ நிவாரண பலிகள், சடங்கு முறைகள் நிறுத்தப்பட்டது. 

அதற்கு மாறாக, "நமது உடல் தான் இறைவனது ஆலயம். எங்கு இரண்டு அல்லது மூன்று பேர் ஒருமனதாக இறை வேண்டல் செய்கின்றனரோ, அங்கு அவர்கள் நடுவில் இறைவன் எழுந்தருளுவார்" எனப் போதிக்கப்பட்டது. வீடுகளில் மக்கள் இறை வழிபாடு செய்யும் வழக்கம் தோன்றியது. 

வழிபாட்டில் அருளுரை முக்கிய இடம் பிடித்தது. அங்கு அருளப்பட்ட போதனைகளில் சிந்தையில் மாற்றம் உருவாக வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. அன்பு, உண்மை, கிருபை, மறுபிறப்பு, விசுவாசம், மனத்தூய்மை, இரக்கம், மன்னிப்பு, கருணை, நீதி, எளிமை, தாழ்மை, அடக்கம், பொறுமை, பாடுகளைச் சகித்தல் போன்ற கிறிஸ்துவின் உபதேசங்கள் போதிக்கப்பட்டது (15: 1-29).

4. அடக்குமுறை நடவடிக்கைகளால் கிறிஸ்தவம் வளர்ச்சி அடைந்தது. 

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் முதல் 30 வருடங்களுக்கு யூத சமயத் தலைவர்களால் கடும் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது. 

ஏனெனில் யூத சமய சடங்குகள், பல வழிபாட்டு முறைகளை கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட யூதர்கள் எதிர்த்தனர். அதனால் யூதர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. 

அதன் விளைவாக யூத சமயத்தின் பிடியிலிருந்து கிறிஸ்தவம் வெளியேறி தனித்துவ அடையாளத்தை அடைந்தது. இல்லையென்றால் கிறிஸ்தவம் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்திருக்கும். 

கி. பி. 60லிருந்து கி. பி. 320 வரை ரோம ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்களை கடுமையாக துன்பப்படுத்தினர். பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். 

எனினும் அதிகாரம், உபத்திரவம், சிறையில் அடைத்தல், கடும் கட்டுப்பாடுகள் இவற்றால் கிறிஸ்துவர்களை அழிக்க முடியவில்லை. இறுதியில் ரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வமான சமயமாகக் கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

(4:1-7, 4:15-18, 5:24-33, 7:1-60,8:3-4, 9:23-25, 12:1-4, 13:45, 13:50, 14:19, 16:19-24, 17:5-8, 18: 12-17, 19:23-41, 20:3, 21:28-22:25, 23:1-10, 24:1-21, 25;7-12).

 

Saturday, 28 August 2021

அப்போஸ்தல நடபடிகள் - நூல் அறிமுகம் - பகுதி -1: நூல் பின்னணி.

நூல் பின்னணி.



நூல் ஆசிரியர் :

அப்போஸ்தல நடபடிகள் என்னும் இந்த நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இரண்டாம் பாகம் ஆகும். 

லூக்கா நற்செய்தி நூலைப் போலவே இந்த புத்தகமும் "தெயோப்பிலு" என்கிற மனிதரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது (1:1).

இந்த நூல் பவுலுடன் இணைந்து பணியாற்றிய ஒருவரது சுய அனுபவங்களையும் உள்ளடக்கியது (16:10). 

இந்த நூலை எழுதியவர் பெயர் குறித்து நேரிடையான குறிப்பு இல்லை. எனினும் நூலின் உள் குறிப்புகள் மற்றும் மொழிநடை அவர் பிரியமான வைத்தியராகிய "லூக்கா" ஆக  இருக்கக் கூடும் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

லூக்கா ஒரு மருத்துவர். இவர் கிரேக்க இனத்தை சேர்ந்தவர். சிரியா நாட்டின் அந்தியோக்கியாவில் வசித்தவர் என நம்பப்படுகின்றது (கொலொ 4:11-14, பில 24:2). 

திருத்தூதர் பவுலோடு அவரது இண்டாவது மிஷனரிப் பயணத்தில் இணைந்தார் (அப் 16:10). பவுலோடு இறுதிவரை இணைந்து நற்செய்தி பணியைச் செய்தவர் (2 திமொத்தேயு 4:14).  

காலம்:

இந்த நூல் கி.பி 62 - கி.பி 64க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. 

நோக்கம்:

1. ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஆண்டவரின் உயிர்த்தெழுதலை தங்கள் சாட்சியுள்ள வாழ்க்கை மூலம் பிறருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் (1:8). இதுவே அவர்களின் முதன்மையான பணி என்பதை வலியுறுத்துகிறது. 

2. ஆதித் திருச்சபை உருவான வரலாறு மற்றும் திருச்சபையை எவ்விதம் சீடர்கள் வழி நடத்தினார்கள் என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. 

3. நான்கு நற்செய்தி நூல்கள் -  திருச்சபைநிருபங்கள்; இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக இந்த நூல் செயல்படுகிறது.

4.  திருத்தூதர் பவுலின் ஊழியம், உபதேசங்கள் விவரமாக எழுதப் பட்டுள்ளது. இதனால் அவர் எழுதிய நிருபங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  

5. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட இரண்டாம், மூன்றாம் தலைமுறை விசுவாசிகளுக்கும், எதிர்கால திருச்சபைக்கும் பயன்படும் வகையில் சபை உருவான சரித்திரத்தை முறையாக ஆவணப்படுத்திடவும் எழுதப்பட்டுள்ளது.

திறவுகோல் வசனம் :

தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (1:8). 

திறவுகோல்  வார்த்தை: 

சாட்சி: 1:8/ 1:22/ 2:32/ 2:40/ 3:15/ 4:33/ 5:32/ 7:56/ 8:25/ 9:15/ 10:43/ 13:31/ 14:3/ 14:17/ 16:31/ 17:3/ 19.11/ 22:20/ 23:11/ 24:11/ 26:1/ 28:23. 

சாட்சி என்பதற்கு உபயோகம் செய்யப்பட்ட கிரேக்க வார்த்தை "Martyr". அதன் பொருள் "உயிரே போனாலும், பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை அப்படியே உண்மையாகச் சொல்லுதல்" என்பதாகும். 

நூலின் துல்லியம்:

இந்த நூலில் 32 நாடுகள், 54 நகரங்கள், 95 நபர்களின் பெயர்கள், அரசர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது பதவிகளைப் பற்றிய குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தற்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளுடன் துல்லியமாகப் பொருந்தியுள்ளது. 

வரலாற்றுப் பின்னணி - இயேசுவின் இறைப்பணி :

இஸ்ரேல் தேசம் ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது. யூத தலைவர்கள் இஸ்ரேலின் மாகாணங்களின் ஆளுந‌ர் களாக  ரோமப் பேரரசால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மக்களிடம் வரி வசூல் செய்வது அவர்கள் வேலை. 

யூதர்களது சமய சங்கமும் ஒரு வலுவான அமைப்பாகச் செயல்பட்டு வந்தது. அவர்களுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு இருந்தது. 

ரோமப் பேரரசின் ஆட்சி அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவிக்கக் கடவுள் மெசியாவை (மீட்பர்) அனுப்புவார் என நம்பிக்கையுடன் யூத மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

அத்தகையச் சூழலில் இயேசு கிறிஸ்து அவதரித்தார். அவர் தனது 30வது வயதில் யூதர்கள் மத்தியில் இறைப்பணியைத் துவங்கினார். இறைவனிடம் இருந்து வந்த மெசியா என தன்னை அறிவித்தார். மூன்றரை ஆண்டுகள் இறைப்பணி செய்தார்.

இயேசு கிறிஸ்துவின் பணிகள்:

"மனம் திரும்புங்கள். இந்த உலகில் இறைவனது ஆட்சி வெகு விரைவில் அமைய உள்ளது". இதுவே அவரது போதனைகளின் மையக் கருத்து. 

எளிமையான உவமைகள், கதைகள் வழியாகப் போதித்தார். அதிகாரத்துடன் பேசினார் (authoritative). அதை மக்கள் மிக விருப்பத்துடன் கேட்டனர். 

இயேசு பிரமிக்க வைக்கும் பல அற்புதங்கள் செய்தார். பலர் நோயிலிருந்து குணமடைந்தார். பார்வையற்றவர்கள் பார்வை பெற்றனர். ஊனமுற்றவர்கள் நன்றாக நடந்தனர். தொழுநோய் சுகமானது. இறந்தவர் மீண்டும் உயிர் பெற்றனர். காற்றும், கடலும் கூட அவரது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டது. 

அவரைத் தங்களது அரசராக்க மக்கள் விரும்பினர். சீடர்களிடமும் அத்தகைய விருப்பம் இருந்தது. ஆனால் இயேசுவிற்கு பணம், அதிகாரம், புகழ் இவற்றில் விருப்பம் இல்லை. அவற்றை வெறுத்து ஒதுக்கினார். அவருக்கு ஆட்சி அமைக்கும் திட்டமும் இல்லை. எனவே மக்களிடமிருந்து விலகி பாலை வனாந்தரங்களில் வசித்து வந்தார். 

எனினும் அவரை மக்கள் விடவில்லை. அவர் இருக்கும் இடம் தேடித் தொடர்ந்து சென்றனர். ஆனால் இயேசு தமது இறையரசு இவ்வுலகுக்கு உரியதல்ல என்றார். 

தம்மைப் பின்பற்றுபவர்கள், "அதிகாரத்தை நாடாமல் மக்களுக்கு ஒரு ஊழியக்காரனைப் போல சேவைச் செய்ய வேண்டும்" எனக் கற்பித்தார். "எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்" எனப் போதித்தார். 

தன்னை "இந்த உலகத்தின் பாவத்திற்காகப் பாடுபட்டு இரத்தம் சிந்தும் ஒரு பலி ஆடு" எனக் கூறினார். "சிலுவையில் தான் பாடுபட்டு மரணம் அடைய வேண்டும், அதன் பின்னர் மூன்றாவது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன்" எனப் பல முறை அறிவித்தார். 

கொடூர குற்றம் இழைப்பவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார்கள். அது ஓர் அவமான மரணம். பல சீடர்கள் அதிகாரம், பதவி, வசதியான வாழ்க்கை கிடைக்கும் என்று அவரைப் பின்தொடர்ந்தனர். அவருடைய "சிலுவை மரணம்" உபதேசங்கள் பல சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் பலர் அவரை விட்டு விலகினர். 

இறுதியில் பன்னிரண்டு சீடர்கள் மட்டும் அவரைப் பின்பற்றினர். அவர்களும் கூட இயேசுவின் சிலுவை மரணத்தை விரும்பவில்லை. 

இயேசு கிறிஸ்து - சமயத் தலைவர்கள் மோதல்:

யூத சமயத் தலைவர்கள் இயேசுவின் அபரிமிதமான புகழைக் கண்டு பொறாமை அடைந்தனர். 

மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்ததால் அவர் உபதேசம் செய்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. 

ஆனாலும், இது இப்படியே தொடர்ந்தால் ரோமப் பேரரசு தங்களது பதவியை பறித்துக் கொண்டு விடுமோ என்று கடும் அச்சம் அடைந்தனர். 

எனவே இயேசுவை மக்கள் வெறுக்கும் படி பல தந்திரமான  சூழ்ச்சிகளைச் செய்தனர். அவரைக் கொலை செய்வது என்றும் முடிவு செய்தனர்.  

மதச் சடங்கு, மத சட்டம், ரோமப் பேரரசின் சட்டங்கள் இவற்றை மீறி அவர் செயல்படுகிறார் எனக் குற்றம் சாட்டிட முயன்றனர். 

மத சட்டம் - ஓய்வு நாள் மீறல் - புதிய விளக்கம்:

யூதர்களுக்குச் சனிக்கிழமை புனிதமான ஓய்வு நாள். "ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது" என்பது பத்து கட்டளைகளில் ஒன்று.

நோயால் வருத்தப்பட்ட ஒருவரை ஓர் ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்தினார். 

உடனே சமயத் தலைவர்கள், 

"கடவுளிடம் இருந்து வந்தவன் எப்படி ஓய்வு தினத்தில் வேலை செய்வான்"? 

"இவன் கடவுளிடம் இருந்து வந்தவன் இல்லை. தீய சக்திகள் துணை கொண்டு குணப்படுத்துகிறான்" எனக் குற்றம் சாட்டினர். 

இயேசு அவர்களை நோக்கி, 

"ஓய்வு நாளில் உங்கள் ஆடு அல்லது மாடு குழியில் விழுந்தால் அதை நீங்கள் தூக்கி மீட்காமல் விட்டு விடுவீர்களா? ஆடு, மாட்டுக்குக் காட்டும் அக்கறை இந்த மனிதருக்கு நான் காட்டுவது தவறா? என வினவினார். இயேசு அவர்கள் வெளி வேஷத்தைக் கலைத்தார். ஆனால் அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் ஆலோசித்தனர் 

(லூக்கா 6: 1-11/மத் 12: 9-14/ மாற்கு 3: 1-6).

மத சட்டம் - தண்டனை -புதிய தீர்ப்பு:

யூத சமயத் தலைவர்கள், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை அவரிடம் குற்றவாளியாக கொண்டு வந்தனர். 

"இந்த பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லப் பட வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டம். நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினர். அவர் மேல் குற்றம் சுமத்த ஏதாவது ஒரு காரணம் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகக் கேட்டனர்.

இயேசு அன்பை, மன்னிப்பை, கருணையைப் போதித்தவர். அவளை மன்னித்து விடுவித்து விட்டால், மோசேயின் சட்டத்தை மீறி செயல் படுகிறார் எனக் குற்றம் சாட்ட முடியும். 

"அவளைக் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுங்கள்" என்று தீர்ப்புக் கூறினால் அன்பு, மன்னிப்பு, கருணை போன்ற உபதேசங்கள் பொருளற்றதாக்கி விடும். 

இயேசு அவர்கள் தந்திரத்தை அறிந்து அவர்களை நோக்கி, "உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மீது முதல் கல்லை எறியலாம்" என்றார். 

அந்த திரளான கூட்டம் குற்றப்பட்ட இருதயத்துடன் அப்படியே கலைந்து சென்றனர்.

இயேசு அந்த பெண்ணை பார்த்து, "ஒருவரும் உன்னைத் தண்டிக்க வில்லையா?" "நானும் உன்னைத் தண்டிக்கப் போவதில்லை. ஆனால் இனிமேல் பாவம் செய்யாதே" என்றார். 

மதச் சடங்கு - காணிக்கை செலுத்துதல்:

யூதர்கள் பாவத்திற்குப் பரிகாரமாக ஆடு, மாடு, பறவைகள் இவற்றைப் பலி செலுத்துவது வழக்கம். 

எனவே எருசலேம் தேவாலயம் ஒரு வியாபார மையமாகக் காணப்பட்டது. அது ஆடு, மாடு, பறவைகள் விற்கும் சந்தை போல கடைகளால் சூழப்பட்டிருந்தது. 

யூதர்கள் பல தேசங்களில் வசித்து வந்தனர். எனவே அங்குப்  பல தேசத்தின் பணப் பரிவர்த்தனையும் (money exchange) நடந்தது. 

இயேசு தேவாலயம் பணம் சம்பாதிக்கும் இடம் இல்லை எனக் கண்டித்தார். அங்கிருந்த வியாபாரிகளை சாட்டையால் அடித்து விரட்டினார். 

இறைவன் பலிகளை அல்ல மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே உண்மையான பலி எனப் போதித்தார். 

இது யூத சமயத் தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் மக்களிடம் அவருக்குச் செல்வாக்கு இருந்ததால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை.   

இயேசு - ரோமப் பேரரசு இடையே கலகம் மூட்டும் சூழ்ச்சி:

இயேசுவுக்கும் ரோமப் பேரரசுக்கும் இடையே கலகம் உண்டு பண்ண மதத் தலைவர்கள் தந்திரம் செய்தனர். அவரிடம் ஒற்றர்களை அனுப்பினர். 

அவர்கள் அவரிடம் ரோம நாணயத்தைக் காண்பித்து சீசருக்கு கப்பம் கட்டுவது சரியா, தவறா எனத் தந்திரமாகக் கேட்டனர். 

இயேசு நாணயத்தைக் காண்பியுங்கள் என்றார். அதில் உள்ள எழுத்தும், உருவமும் யாருடையது என அவர்களிடம் கேட்டார். 

அவர்கள் "சீசருடையவை" என்றார்கள். 

அப்படியானால் சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் செலுத்துங்கள் என பதில் தந்தார்.

இப்படி இடைவிடாது பல வழிகளில் அவரைத் தொடர்ந்து குற்றம் சாட்டி தொல்லை அளித்தனர்.

இயேசு சிறைப்படுதல் - சிலுவை மரணம்:

இறுதியாக எந்த குற்றமும் செய்யாத இயேசுவை ஓர் இரவில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது மரண தண்டனை விதிக்க ஏதுவாக என்ன குற்றம் சுமத்தலாம் என ஆலோசனை செய்தனர். 

கைது செய்யப்பட்ட பின்னர் ஒருவர் மீது பழி சுமத்த யோசிப்பது  எவ்வளவு பெரிய கொடுமை!!! 

அவர் மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். ஆனால் அது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட போதுமானதாக இல்லை. 

சிலர் "இவன் எருசலேம் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாட்களில் திரும்ப கட்டுவேன்" எனக் கூறியதாக குற்றம் சாட்டினர். 

அவர் தனது உடலை ஆலயம் எனக் குறிப்பிட்டார். "என்னைக் கொலை செய்தாலும் மூன்று நாளில் நான் திரும்பவும் உயிர்த்தெழுவேன்" என்று அவர் சொன்னதை இவ்வாறு திரித்துக் கூறினார்கள். 

ஆனாலும் அவர்கள் கூறிய எந்தக் குற்றச்சாட்டும் அவருக்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு போதுமானதாக இல்லை. 

இறுதியில் அவர்கள் அவரை நோக்கி 

"நீர் வணங்கப்படத்தக்கக் கடவுளின் ஒரே மகனா?" எனப் பகிரங்கமாக விசாரணை வளையத்தில் வைத்துக் கேட்டனர். 

அதற்கு இயேசு "ஆம், நீங்கள் சொல்வது போல நான் கடவுளின் குமாரன்" எனப் பதில் தந்தார். 

யூதர்கள் ஒரே கடவுள் கோட்பாடு உடையவர்கள். யாவே எனும் தெய்வத்தை மட்டும் வழிபாடு செய்பவர்கள். தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் வேறு ஏதாவது ஓர் தெய்வத்தை வணங்கினால், அவர்களைக் கொலை செய்யவும், அவர்களது மதச் சட்டம் அனுமதிக்கிறது. 

எனவே இயேசு தம்மைக் கடவுளுடைய குமாரன் எனக் கூறியதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கு இயேசுவின் தாயார், சகோதர, சகோதரிகளை நன்கு தெரியும். அவரது குடும்பத்தையும் நன்கு அறிவார்கள்.

எனவே இயேசு தம்மை தேவகுமாரன் எனக் கூறியதைக் கடுமையான தேவ தூஷணமாக, அவதூறான காரியமாகக் கருதினார்கள்.  

இந்தச் சூழலை யூத சமயத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். 

அவர் கடவுளைப் பழிப்பதாகக் கூறினார்கள். அதனால் அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்யும்படி மக்களைத் தூண்டி விட்டார்கள். 

ரோம அதிகாரத்திலிருந்த ஆளுந‌ர் முயன்றும் அவரை விடுதலை செய்ய முடியவில்லை. யூதர்களால் இயேசு சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார். 

இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார். அதன் பிறகு 40 நாட்கள் தம்முடைய சீடர்களுக்கு தரிசனம் தந்தார். ஆவியானவர் அவர்கள் மீது ஊற்றப்படும் வரை எருசலேமில் காத்திருக்கும் படி கூறினார். அதன் பின்னர் அவருடைய உபதேசங்களை உலகின் கடைசி எல்லை வரை அறிவிக்கும் படி கட்டளை தந்தார். அவர் விண்ணகம் சென்றார். 

இதற்கு பிறகு திருச்சபை வரலாற்றின் 30வருட நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த நூல் (கி.பி 33 - 63).

(தொடரும்).

References:

1. திருமறை பொது மொழி பெயர்ப்பு,

2. The Holy Bible New Revised Standard Version.

3. நிறை வாழ்வு ஆய்வு வேதாகமம் _ The Full Life Study Bible (Tamil version), Life Publishers International, USA.

4.The Wiersbe Bible Commentary, Warren W. Wiersbe, www.davidcook.com  

Image source: From Internet with thanks.

Saturday, 21 August 2021

ஏன் வேதத்தை முறையாக் கற்க வேண்டும்?

ன் வேதத்தை முறையாகக் கற்க வேண்டும்? 


1. பக்தி உணர்வில் நிலை பெற வேண்டும். (எபேசியர்: 3: 16-19)

கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே வாழ்க்கையை முழுமையாக்குகிறது. 

சுவை மிகுந்த கனி தரும் மரம் போல வாழ்க்கை வளம் பெறுகிறது. 

மனதில் பக்தி எனும் தீபம் சுடர்விட, வேத வசனங்கள் எனும் எண்ணெய் தொடர்ந்து ஊற்றப்பட வேண்டும். 

வேதத்தைத் தொடர்ந்து முறையாக கற்றுக் கொள்வதன் வழியாக இறை பக்தி மனதில் நிலைத்து நிற்கிறது. உள்ளத்தில் வல்லமையும் ஆற்றலும் அருளப்படுகிறது. எனவே வேதத்தை நாம் ஆவலுடன் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். 

2. மனம் தூய்மை அடைய வேண்டும். (ரோமர்:12: 1-2)

மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே வாழ்க்கையில் மிக மேன்மையான முயற்சி. 

மனித உள்ளம் பெருமை, பேராசை, பொறாமை, கோபம், பிறர் பொருளை விரும்புதல், பிறரை அடக்கி ஆள முற்படுதல்.., போன்ற பல தீய உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கிறது.

மனம் இத்தகைய தீய உணர்வுகளின் கட்டுப்பாட்டிலிருந்து  விடுதலை அடைய வேண்டும். 

அன்பு, அமைதி, மனநிறைவு, உண்மை, பொறுமை, கருணை, இரக்கம், பிறர் நலம் விரும்புதல், சகிப்புத்தன்மை, பணிவு, அடக்கம், இறைநம்பிக்கை.., போன்ற நல்ல உணர்வுகள் மனதை ஆளுகை செய்ய வேண்டும்.

வேத வசனங்கள் மனதில் தொடர்ந்து விதைக்கப்படும் போது தீய செயல்கள் மீது கடும் வெறுப்பு உருவாகிறது.

நல்ல செயல்களை செய்ய வேண்டும் எனும் ஆவல் பிறக்கின்றது.

எனவே வேதத்தைத் தொடர்ந்து கற்க வேண்டும்.

3. இறை பிரசன்னத்தில் வாழ வேண்டும். (யாத்: 33:15)

பொருட்கள், பணம், அதிகாரம், உறவுகள் அளிக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. இவை இருக்கும் வரை சந்தோஷம் தொடரும். அனுபவித்தவுடன் மறைந்து போகும். 

அத்துடன் பணம், அதிகாரம், உறவுகளை இழந்து விடுவோமோ என்கிற அச்சம் நம்மை விடாமல் துரத்தும்.

இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கவலை மனதை விடாமல் அலைக்கழிக்கும். 

உண்மையான மகிழ்ச்சி என்பது வெளியில் தேடி ஓடி அடைவதல்ல. அது உள்ளத்தில் உணர்வது. 

மெய்யான சந்தோஷம் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதில்லை. 

உள்ளம் இறை பிரசன்னத்தில் நிலைத்து நிற்பதே உண்மையான நிலையான இன்பம்.

இந்த தெளிந்த புத்தியை அடைய வேதத்தை முறையாக் கற்பது அவசியம்.

வேத வசனங்கள் கடவுளை வெளிப்படுத்துகிறது. அவை மன மகிழ்ச்சியைத் தருகிறது. 

இறைமை என்பது ஓர் அனுபவம். கடவுளின் அன்பை உணர்ந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலைகள் மறையும். மனதின் பாரம் குறையும். நம்பிக்கை பெருகும்.

இறைபிரசன்னத்தில் வாழ்வதை விட மேலான ஆசீர்வாதம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

வேதத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து தியானித்து வருவதன் மூலம் தேவ பிரசன்னம் எப்போதும் நம்முடன் இருக்கும். எனவே வேதத்தைக் கவனமுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.

4. பற்றுறுதி - வைராக்கியம் வளர வேண்டும். (எபிரேயர் 12:1) 

ஆழ்ந்த பக்தியில் நிலைத்திருப்பது எளிதானதல்ல. 

மனதைத் தூய்மையாகப் பாதுகாத்திட கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது.

உண்மையாக வாழ முற்படும் போது பல முறை தோல்வி ஏற்படுகிறது. மனம் சோர்வடைகிறது. சலிப்பு வருகிறது.

எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு முயற்சி தேவையில்லை. ஆனால் உயர்ந்த வாழ்க்கை வாழ கடும் உழைப்பு தேவை. அர்ப்பணிப்பு அவசியம். 

விளையாட்டு வீரர்களைக்  கவனித்துப் பாருங்கள். எவ்வளவு கவனமாக பயிற்சி பெறுகின்றனர். நேர்த்தியான பயிற்சியாளர். உணவில் கட்டுப்பாடு. உடலைப் பராமரிப்பதில் கடும் உழைப்பு.  துல்லியமான நேர நிர்வாகம். இலக்கு நோக்கி பயணம்.

இறை வாழ்க்கை வாழவும் இத்தகைய பயிற்சி தேவை. மனதில் வைராக்கியம் வேண்டும். 

பிடிவாதம் என்பது சுய ஆசையை நிறைவேற்ற விரும்புவது. வைராக்கியம் என்பது ஒரு உன்னத குறிக்கோளை அடைவதற்காக அர்ப்பணித்து வாழ்வது.

மனதில் வைராக்கியம் இருந்தால் தோல்விகளால் துவண்டு விட மாட்டோம். மனம் சோர்வில்  மூழ்கி விடாது. வீழ்ந்தாலும் மீண்டும் எழும்.

வேத வசனங்களை இடைவிடாது கற்றுக் கொள்வதன் மூலம் மனதில் வைராக்கியம் உண்டாகும்.

5. உரையாடலில் தெளிவு இருக்க வேண்டும். (1 தீமோ: 6:3-5)

நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமய உரையாடல். 

உறவுகளை மேம்படுத்த இறை உபதேசங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

சமய உரையாடல்கள் அன்பை விதைக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிறர் நலம் விழைய வேண்டும். வாழ்வை நேர்மையான முறையில் வாழ ஊக்கம் தர வேண்டும். 

அவை ஒருபோதும் வெறுப்பு, துவேஷம் இவற்றைத் தூண்டக்கூடாது. பல அடிப்படை வாத சமய உரையாடல் கடும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது 

வேதத்தின் மொழி அறிவியல் போலத் தர்க்க ரீதியாக ஆய்வு செய்த அறிக்கை மொழி கிடையாது. 

அவை அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவை. அன்பு எனும் அஸ்திவாரம் மேல் கட்டப்பட்டது. அவை நீதி, நியாயம் என்கிற வெளிச்சத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அறம் அதன் மையம். இரக்கம், கருணை அதின் செயல் வடிவம்.

வேதத்தை முறையாகக் கற்பது மட்டும் போதாது. அதனைக் கடைப்பிடித்தும் வாழ வேண்டும். அவர்களுக்கு மட்டுமே வேதத்தின் உண்மைப் பொருள் வெளிப்படும்.

மிகத் தீவிரமான வாசிப்பு, அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களால் எழுதப்பட்ட விளக்கங்கள் வேதத்தைப் புரிந்து கொள்ள உதவும்.  

அத்துடன் தாழ்மை உணர்வுடன் வேதத்தைக் கற்றுக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.

6. வளர்ச்சி அடைய வேண்டும். (1 பேதுரு: 2-3) 

ஒவ்வொரு நாளும் நமக்கு அருளப்படும் ஓர் கொடை. மேலும் கற்பதற்கு ஓர் வாய்ப்பு. 

கற்பதன் வழியாக மனம் மேம்படுகிறது. மனவளம் அடைகிறது. தீய உணர்வுகள் அகல்கின்றன. நல் உணர்வுகள் பெருகுகிறது.

மனதின் எண்ணங்கள் நேர்மறையாக உதிக்கின்றது. 

எனவே வாழ்வு வளர்ச்சி பெற வேதத்தை அனுதினமும் கற்க வேண்டும். தியானிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.